துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. நியூசிலாந்து அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி பைனலில் அபாரமாக விளையாடி இருக்கிறது.
குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா ஆரம்ப கட்டத்தில் அதிரடியாக விளையாடியது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணி கேப்டன் இந்த தொடர் எங்களுக்கு மிகவும் ஒரு நல்ல தொடராக அமைந்தது.

இந்த தொடர் முழுவதும் எங்களுக்கு பல சவால்கள் அளிக்கப்பட்டது. அதனை ஒரே அணியாக இணைந்து நாங்கள் எதிர்கொண்டோம். இன்று ஒரு பலமான அணியால் தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். இந்த தொடரில் ஒவ்வொரு நேரத்திலும் எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்கள் அபாரமாக விளையாடி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்கள்.
எங்களுடைய பவுலர்களும் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவில் தொடர்ந்து சில விக்கெட் இழந்தது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதற்காக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். நாங்கள் ஒரு 20,25 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். ரோகித் சர்மாவும், கில்லும் அபாரமாக விளையாடி வந்தார்கள்.
குறிப்பாக ரோகித் சர்மா ஆடிய ஆட்டம் மிகவும் பிரமிப்பாக இருந்தது. ரோகித் சர்மா விக்கெட் பிறகு ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பும் என நினைத்தோம். இதேபோன்று ரச்சின் ரவீந்தரா எங்களுக்கு பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முக்கியமான கட்டத்தில் கை கொடுக்கின்றார்.இவ்வளவு இளம் வயதிலேயே கிரிக்கெட் குறித்து அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.
அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. கேப்டனாக என்னுடைய முதல் ஐசிசி தொடர் ஒரு நல்ல பயணமாக இருந்தது. எங்கள் அணி வீரர்களால் இந்த பயணம் எனக்கு சுலபமாகப்பட்டது. நாங்கள் இந்த தொடர் முழுவதும் பல ஆடுகளத்தில் விளையாடினோம். இது எங்களுக்கு சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார்.