துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறுவதால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் அரையிறுதி சுற்று போட்டிகள் தொடங்கிய போது ரமலான் மாதமும் தொடங்கியது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும். எனினும் இந்த நோன்பு வைப்பதற்கு இருந்து பலருக்கு விதிவிலக்கு இருக்கிறது. ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு பயணம் செய்திருக்கும் நபர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு விதிவிலக்கு இருக்கிறது.

இதேபோன்று சில காரணங்களால் நோன்பை வைக்க முடியவில்லை என்றாலும் அதை வேறு ஒரு மாதத்தில் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நாட்டுக்காக முகமது ஷமி விளையாடி வரும் நிலையில் வேகப்பந்துவீச்சாளர் என அவர் மட்டும்தான் இருக்கிறார்.
பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளராக ஹர்திக் பாண்டியா இவரை தவிர இருக்கின்றார். இதனால் ஒட்டுமொத்த பொறுப்பும் ஷமி மீதுதான் விழுந்திருக்கிறது. இந்த சூழலில் துபாய் பாலைவனப் பகுதி என்பதால் அங்கு பகல் நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதே மிகவும் கடினம். இதன் காரணமாக ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் நோன்பு வைக்கவில்லை. இதற்கு இஸ்லாமிய மத குருவான மௌலானா சகாபுதீன் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
ஷமி பாவம் செய்து இருப்பதாகவும் அவர் ஒரு குற்றவாளி என்றும் கூறியிருந்தார். மௌலானாவின் இந்த கருத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள மற்ற மதகுருகளும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். நோன்பு வைப்பதற்கு விதிவிலக்கு இருக்கும்போது மௌலானா சகாபுதீன் தேவையற்ற குற்றச்சாட்டை வைப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதைப் போன்று ஷமிக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்து ஆதரவு வந்தது இந்த நிலையில் இறுதி போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஷமி நோன்பு வைப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுந்த நிலையில் ஷமி இன்றும் நாட்டுக்காக நோன்பு வைக்கவில்லை. பந்துவீசி கொண்டிருந்தபோது ஷமிக்கு கேட்ச் பிடிக்க முடியாமல் காயம் ஏற்பட்டது. அப்போது ஷமி கூல்டிரிங்ஸ் அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.