துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்த உள்ளது. நியூசிலாந்து அணி எப்போதுமே இந்தியாவுக்கு ஐசிசி தொடரில் கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது அணிகளும் இதுவரை ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12 முறை மோதி இருக்கிறார்கள்.
இதில் இந்திய ஆறுமுறையும் நியூசிலாந்து அணியும், ஆறுமுறையும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த சூழலில் லீக் சுற்றில் ஏற்கனவே நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி இருக்கிறது. துபாய் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

ஆனால் இந்த தொடரில் இந்திய அணி அளவுக்கு நியூசிலாந்து அணியிலும் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய திறமையை காட்டி வருகிறார்கள். இதனால் இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசிம் அக்ரம், இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை கணித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளுக்கும் எந்த மாதிரியான ஆடுகளம் கிடைக்கப் போகிறது என்பது குறித்து நன்றாக தெரியும். குறிப்பாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக துபாய் ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் இந்தியாவுக்கு இது நிச்சயமாக சுலபமாக இருக்காது. ஆனால் இந்த தொடரை வெல்லும் அணியாக இந்தியா தான் நிச்சயம் இருக்கும்."
"ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்காது. இந்தியா 70% மற்றும் நியூசிலாந்து 30 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 60% ஆகவும் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 40 சதவீதமாகவும் உள்ளது. ஏனென்றால் நியூஸிலாந்து அணியும் பலமாக இருக்கிறது."
"இதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டனாக சாட்னர் சிறப்பாக செயல்படுகிறார். அவரிடம் ஒரு நம்பிக்கையும் அமைதியும் இருக்கிறது. வில்லியம்சன் போல் அவரும் களத்தில் பதற்றமில்லாமல் இருக்கின்றார். அவருடைய இந்த இயல்பு நிச்சயம் அணிக்கு ஒரு பலமாக இருக்கும். களத்தில் அமைதியாக இருப்பதற்கும் சோம்பேறியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது."
"நியூசிலாந்து வீரர்கள் எல்லாம் அமைதியான வகையை சார்ந்தவர்கள் என்று வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, இந்திய அணியை வீழ்த்த முடியும் என்றால் அது நியூசிலாந்தால் மட்டும் தான் முடியும். நான் தனிப்பட்ட முறையில் தென்னாபிரிக்கா தான் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் என்று நினைத்தேன்."
"ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி பலம் வாய்ந்த ஒரு அணியாக விளங்கியது. தற்போது நியூசிலாந்து அணியில் ரச்சின் மற்றும் வில்லியம்சன் இருவரும் பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடி அணியின் இன்னிங்சை கட்டமைக்க வேண்டும். இந்த இரண்டு வீரர்களும் சுழற்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்வார்கள்."
"துபாய் போன்ற ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி மட்டுமே இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க முடியும். இந்திய அணி சிறு தவறு செய்தால் கூட அதனை நியூசிலாந்து அணி நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்" என்று அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு வீரர்களுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் சதம் அடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.