துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லும் என கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய தொடர் தோல்விக்கு பிறகு யாராவது கூறி இருந்தால் பலரும் சிரித்து இருப்பார்கள். மேலும் இந்திய அணி 2024 ஆம் ஆண்டு வெறும் மூன்றே மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தான் விளையாடியது.
அதிலும் இந்தியா தோல்வியை தழுவியது. அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெறும் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதேபோல் இந்தியாவின் பந்துவீச்சின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிவிட்டார்.

இப்படி பல பாதகங்களுக்கு நடுவே தான் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது. அது எப்படி என்று தற்போது பார்க்கலாம். கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு களத்திற்கு ஏற்ப சரியான வீரர்களை தேர்வு செய்தாலே போதும். 70% வெற்றி நமக்கு உறுதியாகி விடும். ஹைபிரிட் மாடல் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்தியா துபாயில் தான் அனைத்து போட்டிகளையும் விளையாட போகிறது என தெரிந்தவுடன் இந்திய அணி அதற்கு ஏற்ப தங்களது அணியில் ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தார்கள். மேலும் இல்லாத வேகப்பந்து வீச்சை சரி செய்வதற்கு பதில் தங்களது பலமான சுழற் பந்துவீச்சை மேலும் வீரர்களை சேர்த்து பலத்தை கூட்டி விட்டார்கள்.
அதிலும் ஜனவரி மாதத்தில் தேர்வு செய்யப்பட்ட அணியில் வருண் சக்கரவர்த்தி கிடையாது. ஆனால் வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுவதால் அவரை அணியில் சேர்த்தது தான் மாஸ்டர் ஸ்ட்ரோக். மேலும் துபாயில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்குமா இல்லையா என்ற சந்தேகம் இருந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மாலை நேரத்தில் பனிப்பொழிவு இல்லாதது டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இந்திய அணி தைரியமாக நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார்கள். மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது தொடரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.இதன் காரணமாக தான் வருண் சக்கரவர்த்தியை பிளேயிங் லெவனுக்குள் ரோகித் சர்மாவும் கம்பீரும் கொண்டு வந்தனர்.
இதனால் அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் இறுதியில் மீண்டும் நியூசிலாந்தை தோற்கடிக்க அது மிகப்பெரிய ஒரு ஆயுதமாக மாறியது. இதேபோன்று பேட்டிங்கில் ரோகித் சர்மா எடுத்த ஒரு முடிவு மிகப் பெரிய பலமாக மாறியது. கம்பீரும், ரோகித் சர்மாவும் இணைந்து பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதற்காக எட்டாவது வீரர் ஆல் ரவுண்டராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதன் மூலம் ஐசிசி தொடரில் விக்கெட்டுகள் இழந்தாலும் அதன் பிறகு வரும் வீரர்கள் ரன்கள் சேர்ப்பார்கள்.
மேலும் ஆடுகளம் தோய்வாக மாறும் என்பதால் பவர்பிளேவில் ரன்கள் அடிப்பது முக்கியம். இதனை மனதில் வைத்துக்கொண்டு ரோகித் சர்மா சுயநலம் இன்றி முதல் 10 ஓவர்களில் அதிரடியாக ஆட முற்பட்டு இந்திய அணியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வீரர்கள் முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். உதாரணத்திற்கு விராட் கோலி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் ஸ்ரேயாஸ் நியூசிலாந்துக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் கேஎல் ராகுல் இறுதிக்கட்டத்தில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியும் அசத்தினார். இப்படி பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் கூட்டு முயற்சியுடன் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.