மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தில் அவ்வப்போது தனது கோபத்தை வெளிப்படுத்தி அணியின் வீரர்களை வசை பாடினார். குறிப்பாக, குல்தீப் யாதவ் செய்த தவறுக்காக இரண்டு முறை அவரை ஆடுகளத்திலேயே மிக மோசமாக திட்டினார். அந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகி விமர்சனத்தையும் சந்தித்து இருந்தது.
தொடரில் எப்போதெல்லாம் இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்தி இருந்தார். பதட்டமான சூழ்நிலையில் குல்தீப் செய்த தவறுகளை தட்டிக் கொடுத்து திருத்தாமல் கோபமாக பேசியது சரியா? என்ற விமர்சனம் எழுந்தது. அது குறித்து தற்போது ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி பேசி உள்ளார். ரோஹித் சர்மா பேசியதாவது, "எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அர்ப்பணிப்புடன் இருக்கும் வீரர்களுடன் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சில சமயம் ஆடுகளத்தில் உணர்ச்சிகள் பெருக்கெடுத்து விடும். சில சமயம் அதன் போக்கில் நான் அதிகம் சென்று இருக்கிறேன்."
"ஆனால், அவை அனைத்துமே இந்த விளையாட்டின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு மட்டுமே. ஆடுகளத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்றோ, தற்பெருமைக்காகவோ அல்ல. அது இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தின் வெளிப்பாடு மட்டுமே."
"அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் அவர்களின் பொறுப்பு மற்றும் கடமை என்னவென்பது தெரியும். அந்த நாளின் முடிவில் வெற்றி மட்டுமே எங்களது இலக்காக இருந்தது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருந்தோம்."
"நாங்கள் ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வி அடைந்தும், கடைசி வரை போட்டிகளில் தோல்வி அடையாத அணியாக இருந்தோம், கோப்பையையும் வென்றோம். இந்த ஐந்து போட்டிகளிலும் ஒரு முறை கூட நான் டாஸ் வெல்லவில்லை. அப்படி இருந்தும் இந்த தொடரில் ஒரு தோல்வியும் இல்லாமல் கோப்பையை வென்றது மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது, நிறைவை அளிக்கிறது" என்றார் ரோஹித் சர்மா.
மேலும் அவர் தான் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவது இல்லை எனவும் தொடர்ந்து விளையாட போவதாகவும் தெரிவித்தார். எனினும், 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை விளையாடுவேன் என அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், மறைமுகமாக அதை நோக்கித்தான் அவர் நகருகிறார் என்ற பேச்சு உள்ளது.