துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை மூன்றாவது முறையாக கைப்பற்றி இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சாதனை படைத்திருக்கிறார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஏழாவது ஐசிசி தொடரையும், மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் இந்தியா வென்றுள்ளது. இந்த சூழலில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

வெற்றி குறித்து பேசிய அவர், எங்களுக்கு துபாய் வந்து ஆதரவளித்த பல ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய ஆதரவு அபாரமாக இருந்தது. துபாய் எங்களுடைய சொந்த மைதானம் கிடையாது. ஆனால் இவ்வளவு மக்கள் ஒவ்வொரு போட்டிக்கும் கூடி இதை எங்களது சொந்த ஊர் போல் மாற்றி விட்டார்கள்.
இந்த வெற்றி எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை அவர்கள் ஏமாற்றவில்லை. குறிப்பாக அந்த எதிர்பார்ப்பை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை எங்களுக்கு சாதகமாக மாற்றி இருக்கின்றோம்.
எங்களுடைய பவுலர்ஸ் தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். பேட்டிங்கிலும் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி வருகிறார். எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் அதனை சிறப்பாக அவர் கையாள்கிறார். தொடர்ந்து பல போட்டிகளை எங்களுக்கு வெற்றிகரமாக முடித்து வைத்திருக்கிறார்.
சரியான ஷாட்களை ஆடி நெருக்கடியான சூழலில் ரன்களை சேர்க்கிறார். இதன் மூலம் மற்ற வீரர்கள் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். ஹர்திக் பாண்டியா ஒரு பேட்டர் எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் காட்டி வருகிறார். வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார்.
இதே போன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர் கண்டிப்பாக அணிக்கு தேவை. முதல் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகள் அவர் ஐந்து விக்கெட்டுகளை எடுத்த பிறகு இப்படிப்பட்ட ஒரு பவுலரை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தோம். அது எங்களுக்கு அதிர்ஷ்டமாக மாற்றியது.
இதேபோன்று கீழ் வரிசையிலும் பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என நாங்கள் முடிவு எடுத்தோம். அது மற்ற வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்தது. எட்டாவது வீரராக ஜடேஜா பேட்டிங் செய்ய வருவது எங்களுடைய பேட்டிங் வலிமையை காட்டுகிறது.மீண்டும் எங்கள் ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் அதிக அளவு கூடும்போது அது நிச்சயம் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று ரோகித் சர்மா பாராட்டியுள்ளார். ரோகித் சர்மா தான் பைனலில் ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.