துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக ஆடி பெரிய ஸ்கோர் எடுக்காமல் சுயநலம் இல்லாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் அதுவே அவருக்கு எதிரான விமர்சனத்தை கிளப்பியது. கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட ரோகித் சர்மா குறைந்த ஸ்கோரில் ஆட்டம் இழப்பதை ஒரு விமர்சனமாக முன் வைத்தனர். 25 ரன்கள் எடுத்தால் போதுமா என்று ரோகித் சர்மாவை பார்த்து கவாஸ்கர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோஹித் சர்மா இறுதிப் போட்டியில் பட்டையை கிளப்பினார். 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தவறவிட்ட வாய்ப்பை இம்முறை ரோகித் சர்மா சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 253 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி முதல் 10 ஓவரில் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக இறுதிப் போட்டியில் அதிரடியை காட்டினர்.
குறிப்பாக ரோகித் சர்மா நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். எந்த பவுலர்களின் பந்துவீச்சையும் செட்டில் செய்து விடக்கூடாது என்பதற்காகவே ரோகித் சர்மா இறங்கி வந்து ஷாட்களை ஆடினார். குறிப்பாக ரோகித் சர்மா மூன்று சிக்சர், ஐந்து பௌண்டரிகளை விரட்டினார். ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டத்தால் அவர் 41 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இந்த தொடர் முழுவதும் கடைசி கட்டத்தில் பந்து வீசி வந்த கேப்டன் சாண்ட்னர், இந்தியாவின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்துவதற்காகவே முன்கூட்டியே பந்து வீசினார். இதன் மூலம் இந்திய அணி பவர் பிளே முடிவில் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா தொடர்ந்து அதிரடி காட்டிய நிலையில், சுப்மன் கில்லும் சில பவுண்டரிகளை விளாசினார்.இதன் காரணமாக இந்திய அணி 17 ஓவர் முடிவில் 100 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.இதனால் தன் மீது எழுப்பப்பட்ட விமர்சனத்திற்கு ரோகித் சர்மா தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.