துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ்-ஐ இழந்தார். இதன் மூலம், இந்திய அணி தொடர்ந்து 15 முறை ஒருநாள் போட்டிகளில் டாஸ் இழந்து இருக்கிறது. இது போன்ற ஒரு நிகழ்வு உலகில் இதுவரை நடந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அதிகபட்சமாக ஒரு அணி 11 முறை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்று இருந்தது. ஆனால், இந்திய அணி தற்போது அந்த சாதனையை முறியடித்து 15 முறை டாஸ் இழந்துள்ளது. கணக்கியல் முறையில் இதை ஆராய்ந்து பார்த்து பலரும் மிரண்டு போயுள்ளனர்.

ஏனெனில், நிகழ்தகவு (probability) கணக்கின்படி 32,768-ல் ஒரு முறை மட்டுமே இவ்வாறு நிகழும் எனக் கூறப்படுகிறது. இதை சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் 0.00305 சதவீதம் தான் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது. இது இந்திய அணியின் நம்ப முடியாத நிகழ்தகவு கணக்கு ஆகும்.
ரோஹித் சர்மா 12 முறை டாஸ்ஸை தொடர்ந்து இழந்து இருக்கிறார். அதன் நிகழ்தகவு சதவீதம் 0.0244 சதவீதம் என்பதாகும். இது அத்தனை எளிதில் நடந்து விடாது. மேலும், இந்த மோசமான சாதனையை செய்ததன் மூலம் ரோஹித் சர்மா, பிரையன் லாராவின் 26 ஆண்டு சாதனையை சமன் செய்து இருக்கிறார்.
1998 அக்டோபர் மாதம் முதல் 1999 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் பிரையன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, தொடர்ந்து 12 ஒருநாள் போட்டி டாஸ்களை இழந்து இருந்தார். அந்த மோசமான சாதனையை தற்போது ரோஹித் சர்மா சமன் செய்து இருக்கிறார்.
அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து டாஸ்களை தோற்கவில்லை. ஏனெனில், இடையில் லாராவுக்கு பதிலாக வேறு கேப்டன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தினர். அவர்கள் டாஸ் வென்று இருந்தனர். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 12 முறை டாஸ் தோற்கவில்லை. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட பிரையன் லாரா மட்டுமே தோற்று இருந்தார்.
ஆனால், தற்போது இந்திய அணி 15 முறை தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்து இருக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா 12 முறை டாஸில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருக்கிறார். இடையே கே.எல். ராகுல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்தப் போட்டிகளிலும் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இருந்து இந்த சோகம் தொடர்கிறது.
ஆனால், இதில் பெரும்பாலான போட்டிகளை இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது சாதகமான விஷயமாக உள்ளது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால், ரோஹித் சர்மா டாஸில் தோல்வி அடைவது நல்ல விஷயம் எனவும் ரசிகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது. அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துபாய் மைதானத்தில் சேஸிங் செய்வது கடினம் என்பதால் நியூசிலாந்து அந்த முடிவை எடுத்தது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் வேகப் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக நீக்கப்பட்டார். நாதன் ஸ்மித் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.