துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பலப் பரீட்சை நடத்துகிறது. கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை தோற்காமல் வந்த இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது.
இந்த சூழலில் மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிச்சுற்றில் தோல்வியை தழுவாமல் வந்திருக்கிறது. இதனால் கடந்த முறை செய்த தவறை இம்முறை இந்தியா செய்யாது என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் துணை கேப்டன் கில், "இது போன்ற பெரிய போட்டிகளில் எப்போதுமே அழுத்தம் நெருக்கடி என்பது வீரர்களுக்கு இருக்கும். கடந்த முறை 2023 உலகக் கோப்பை தொடரில் எங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் இம்முறை நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து வெற்றி பெறுவோம்."
"இறுதிப்போட்டி போன்ற பெரிய ஆட்டங்களில் எந்த அணி நெருக்கடிகளை சமாளித்து விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் எல்லாம் பல ஐசிசி கோப்பைகளை வென்றதற்கு இதுதான் காரணம். அவர்கள் நெருக்கடிகளை சமாளித்து விளையாடுவார்கள்."
"தங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை அவர்கள் நாக் அவுட் சுற்றில் வெளிக்காட்டுவார்கள். இது செய்வதை விட சொல்வது சுலபம். ஆனால் கடும் நெருக்கடியில் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே நீங்கள் நல்ல அணி என்று அர்த்தம். நாங்கள் துபாயில் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்."
"நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் நாங்கள் தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். எங்கள் பேட்டிங் வரிசையில் உள்ள டாப் 3 அல்லது 5 வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தால் எங்கள் அணி நல்ல ஸ்கோரை எட்டவோ இல்லை பெரிய ஸ்கோரை ஷேஸ் செய்யவோ முடியும்."
"ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட ஆடுகளம் கிடைக்கவில்லை. இதனால் துபாயில் 300 ரன்கள் எந்த அணியும் அடிக்கவில்லை. பாகிஸ்தானில் இருக்கும் ஆடுகளத்தை விட இங்கு இருக்கும் ஆடுகளம் வித்தியாசமாக செயல்படுகிறது. 2024 டி20 உலக கோப்பையை வென்று விட்டதால் இம்முறை கோப்பையை வெல்வதற்கான பசி எங்களிடம் இல்லை என்று நினைக்கக் கூடாது.
நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி வெல்வதற்கு கடும் முயற்சிகளை செய்வோம்" என்று கில் தெரிவித்துள்ளார்.