துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு 38 வயது நெருங்குகிறது. கடந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை தற்போது பார்க்கலாம். "ஐசிசி தொடரில் நான் விளையாடும் இரண்டாவது இறுதிப் போட்டி இது."
"முதலாவதாக நான் இறுதிப் போட்டியில் (2023 உலககோப்பை) விளையாடிய போது எதிர்பார்த்ததை என்னால் செய்ய முடியவில்லை. இம்முறை சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன். நான் இடம்பெற்றிருக்கும் பேட்டிங் வரிசை மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்களால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஆல் டைம் சிறந்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்கிறார்கள். இதைப் போன்று கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள்."
"இதன் மூலம் எங்கள் பேட்டிங் வலுவாக இருக்கின்றது. இந்த தொடரில் ஆடுகளம் எவ்வாறு செயல்பட்டதோ அதேபோல்தான் இறுதிப் போட்டியிலும் இருக்கும் என நினைக்கின்றோம். இதைத் தவிர வேறு எதுவும் வித்தியாசமாக செயல்படாது என்று கூறியுள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவார்களா என்ற கேள்விக்கு அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அப்படி ட்ரெஸ்ஸிங் ரூமில் யாரும் விவாதித்துக் கொள்ளவில்லை. நாங்கள் அனைவரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை எப்படி வெல்வது என்பது குறித்துதான் யோசித்து வருகிறோம். எனவே அது பற்றி யாரும் சிந்திக்கவில்லை" என்று சுப்மன் கில் பதில் அளித்துள்ளார்.