துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர்ந்து இறுதிப் போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் நாளை ஞாயிற்றுக்கிழமை பலப் பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி தோல்வியை தழுவாமல் இந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது.
இந்த சூழலில் ஆடுகளம் மிகவும் தோய்வாக இருப்பதால், தொடக்க வீராக களமிறங்கும் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என நினைக்கின்றார்.
நடப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக 15 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 28 ரன்கள் என விளையாடும் ரோகித் சர்மா 10 ஓவர்குள்ளே தனது விக்கெட்டை இழந்து விடுகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், "ரோகித் சர்மா குறைந்தபட்சம் 25 ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டும். அவர் மட்டும் 25 ஓவர்கள் பிடித்தால் இந்திய அணி அந்த தருணத்தில் 150 முதல் 200 ரன்கள் அடிக்கும்.அதன் பிறகு விக்கெட்டுகளை நாம் இழந்தால் கூட அங்கிருந்து எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்".
"ரோகித் சர்மா மட்டும் களத்தில் 25 ஓவர் வரை நின்றால் இந்திய அணியால் 350 ரன்களுக்கு மேல் கூட குவிக்க முடியும். இது குறித்து அவர் யோசிக்க வேண்டும். அதிரடியாக ஆடுகிறேன் என மைதானத்திற்கு சென்று பேட்டை சுற்றுவது ஒரு வழி என்றாலும், இன்னொரு வழி 20 முதல் 30 ஓவர் வரை களத்தில் நின்று முடிந்தவரை ரன்கள் சேர்க்க வேண்டும்."
"இதை மட்டும் ரோகித் சர்மா செய்துவிட்டால் எதிரணியிடமிருந்து போட்டியை அவர் கவர்ந்து சென்று விடுவார். இதன் மூலம் இந்திய அணி வெற்றியை பெற முடியும். ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக நாம் 25, 30 ரன்கள் அடித்தால் போதுமா? என்பது குறித்து யோசிக்க வேண்டும். கண்டிப்பாக இந்த ஸ்கோர் அவருக்கு சந்தோஷத்தை கொடுக்கக் கூடாது."
"எனவே நான் அவரிடம், என்ன சொல்வேன் என்றால் நீங்கள் 25 ஓவர் வரை களத்தில் நின்று பேட்டிங் செய்தால் அது ஏழு எட்டு ஓவர் வரை நீங்கள் நிற்பதை விட மிகப் பெரிய தாக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தும்" என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதேபோன்று கடந்த இரண்டு போட்டிகளாக கில்லும் தடுமாறி வருவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.