அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன்களின் பெருமைமிகு பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார். கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அவர் தன்னைத்தானே கன்னத்தில் அறைந்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது..
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ், எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்று தந்த நான்காவது கேப்டன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே உலகக் கோப்பையை வென்ற கேப்டனாக உருவெடுத்துள்ளது அவரது அசுர வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தியா வெல்லும் மூன்றாவது டி20 உலகக் கோப்பை இதுவாகும்.

கோப்பையை வென்ற பிறகு பரிசளிப்பு விழாவில் பேச வந்த சூர்யகுமார் யாதவ், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் தாமும் இணைந்துவிட்டோம் என்பதை நம்ப முடியாமல், தன்னைத்தானே கன்னத்தில் சில முறை மெதுவாக அறைந்து கொண்டார். இது ஒரு கனவா அல்லது நிஜமா என்பதை உணர்ந்து கொள்வதற்காக அவர் செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது.
தமது வெற்றி குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "இந்த உணர்வில் இருந்து வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 2024 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த நீண்ட பயணம் தொடங்கியது. என் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் பொறுப்பை வழங்கிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எனது நன்றிகள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். 2024 உலகக் கோப்பையில் நாங்கள் பின்பற்றிய நல்ல விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நினைத்தோம். அதனை அணி வீரர்கள் அனைவரும் மிகச் சரியாகச் செய்தார்கள்," என்று கூறினார்.

அணியில் ஃபார்மில் இல்லாமல் தவித்த அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்தது குறித்துக் கேப்டனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "வீரர்களின் திறமை என்னவென்று எனக்குத் தெரியும். அவர்கள் தனி ஆளாகப் போட்டியை வென்று தரும் திறன் கொண்டவர்கள். சரியான நேரத்தில் அவர்கள் தங்களை நிரூபித்துள்ளனர். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இறுதிப்போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்" என்று கூறினார்.
மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் பாராட்டிய அவர், "பும்ரா தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் ஒரு அபூர்வமான பந்துவீச்சாளர். அவரை நமது நாட்டின் பொக்கிஷம் என்றுதான் கூற வேண்டும். களத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்" என்று புகழ்ந்து பேசினார்.

கடந்த 2024 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி எந்தவொரு தொடரையும் இழக்கவில்லை. தற்போது இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
