பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 5 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 வீரர்களில் 5 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.
2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் மட்டுமே டக் அவுட்டாகினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்களிடையே சில ஆதரவுக் குரல்களும் இருந்தன. ஆனால் இம்முறை சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் பேட்டிங் மோசமாக அமைந்துள்ளது. 1987ஆம் ஆண்டு டெல்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
அதேபோல் 2008ஆம் ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடாக இந்த இரு போட்டிகளும் அமைந்தன. தற்போது இந்த இரு இன்னிங்ஸ்களுக்கும் சவால் அளிக்கும் வகையில் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது.
பெங்களூர் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணியின் விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கின்றனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 வீரர்களில் 5 வீரர்கள் டக் அவுட்டாகி இருப்பது இதுவே முதல்முறையாகும். ரிஷப் பண்ட் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 13 ரன்களும் எடுத்துள்ளனர். மற்றபடி இந்திய வீரர்களின் 3வது அதிகபட்ச ஸ்கோர் வெறும் 4 ரன்கள் மட்டும் தான். இதனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது மோசமான சாதனையாக அமைந்துள்ளது.
இதனால் ரோஹித் சர்மாவின் டாஸ் முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழலில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோராகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.