பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிக முன்னிலை பெற்றதன் மூலமாக, நியூசிலாந்து அணி புதிய வரலாறு படைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய முன்னிலை விட்டுக் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொந்த மண்ணில் இந்திய அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் உற்சாகமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாகவே ரன்களை குவித்தனர். இதனால் 2வது நாள் ஆட்டத்திலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தில் ஒரு பக்கம் ரச்சின் ரவீந்திரா நங்கீரம் ஊன்றி பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் டிம் சவுதி அதிரடியாக ரன்களை குவித்தார்.
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் என்ன செய்வதென தெரியாமல் குழம்பினர். ஏனென்றால் இரு பேட்ஸ்மேன்களுமே பவுண்டரியை அடிப்பதிலேயே குறியாக இருந்தனர். சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்த, இன்னொரு பக்கம் டிம் சவுதி 57 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன் மூலமாக நியூசிலாந்து அணியின் முன்னிலை 300 ரன்களை கடந்தது. இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை விட்டுக் கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி 200 ரன்களுக்கும் அதிகமான முன்னிலையை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் விட்டுக் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்த 3 போட்டிகளில் ஒரு முறை கூட வென்றதில்லை. இதனால் இந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை நோக்கிய பயணத்தை தொடங்கிவிட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.