புனே: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக சீனியர் பேட்ஸ்மேன்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரையும் இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால் ரோஹித் சர்மா தரப்பில், இந்த தோல்விக்கு ஒட்டுமொத்த இந்திய அணியும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது கூடுதல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் தோனி, விராட் கோலி உள்ளிட்டோர் தோல்வியின் போது பொறுப்பினை கேப்டனான தாங்களே எடுத்து கொள்வர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா, இந்த தோல்வி குறித்து அதிகமாக எதையும் யோசிக்க போவதில்லை. சில வீரர்களுடன் நேரடியாக பேச வேண்டும். இரு இன்னிங்ஸ்களிலும் எப்படி விளையாடி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்க வேண்டும்.
அவர்களுக்கு சரியான மெசேஜ் அளிக்க வேண்டும். அது எங்களின் கடமையாகும். கடந்த 12 ஆண்டுகளில் இந்திய அணி மிகச்சிறந்த பயணத்தை கொண்டிருந்தது. இந்த தோல்வி காரணமாக வேறு எதையும் மாற்ற வேண்டிய தேவையில்லை என்று நினைக்கிறேன். நாங்கள் என்ன சரியாக செய்யவில்லை, எதில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.
இந்த தோல்வியால் உடனடியாக மொத்தமாக எதையும் மாற்றப் போவதில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை பற்றி இப்போதி யோசிக்க தேவையில்லை. இந்த தோல்வியால் நான் மிகவும் காயமடைந்துள்ளேன். அடுத்த என்ன இருக்கிறது, எங்களின் வாய்ப்புகள் என்ன என்பதை பற்றி யோசிக்க தோன்றவில்லை. இந்த டெஸ்ட் தொடரை இழந்ததே சோகமாக உள்ளது. இன்னும் சில விஷயங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது.
ஒரு டெஸ்ட் தொடரை இழக்கும் போது, ஒரு குழுவாக தோல்வியடைந்ததாக பொருள். வெற்றியின் போது அனைவருக்கும் பங்கிருக்கும் போது, தோல்வியின் போது அனைவரும் பங்கெடுத்து கொள்ள வேண்டும். இந்த டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. தேவைக்கேற்ப ரன்களை குவிக்க தவறியுள்ளோம். இதுபோன்ற சூழல்கள் நடக்கும்.
அதற்காக இந்த 2 டெஸ்ட் போட்டிகளையும் தீவிரமாக கருதி பேச வேண்டிய தேவையில்லை. எங்களின் பேட்டிங் இந்த டெஸ்ட் தொடரை சரியாக அமையவில்லை. எங்களின் திட்டத்தை நம்ப வேண்டும். நியூசிலாந்து அணி வீரர்கள் அவர்களின் திட்டத்தை நம்பியது போல், நாங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அஸ்வின், ஜடேஜா இருவரும் 12 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
அவர்களின் ரோல் என்னவென்று இருவருக்கும் நன்றாக தெரியும். ஒவ்வொரு போட்டியையும் அவர்களே வென்று கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் கிடையாது. அவர்களுக்கும் சில நேரங்களில் மோசமான ஆட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு முறையும் பேட்டிங்கில் செய்யும் தவறுகளை அவர்கள் வந்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.