இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பும்ராவுக்கு சரியான வேகப்பந்துவீச்சு பார்ட்னர் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இதில் இந்திய அணி நியூசிலாந்து அணி 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறியது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டை எடுக்கவில்லை.

இதனால் பும்ரா மட்டும் தனியாக போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி, பெங்களூர் டெஸ்ட் போட்டியில் பும்ரா தொடர்ந்து எட்டு ஓவர் வீசிய விதத்தை பார்க்கும்போது எனக்கு வசீம் அக்ரம், வக்கார் யூனிசை பார்த்தது போல் இருந்தது. ஆனால் இந்தியா பும்ராவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. பும்ராவுக்கு சரியான பார்ட்னர்கள் வேண்டும்.
ஆஸ்திரேலிய போன்ற தொடரில் பும்ராவை மட்டும் நம்பினால் இந்திய அணி வெற்றி பெற முடியாது. தற்போது உள்ள இந்திய அணியில் பும்ரா தனி ஆளாக போராடி வருகிறார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு சமி, முழு உடல் தகுதியை பெற வேண்டும். அப்போதுதான் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வெற்றி பெற முடியும்.

தற்போது இந்திய அணி தோல்வியை தழுவியிருப்பதால், பலரும் கே எல் ராகுல் மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். இதனை கம்பீர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ராகுல், டிராவிட் பயிற்சியாளராக இருக்கும்போது இது போன்ற சூழலை சரியாக சமாளித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இது போன்ற தோல்வி வருவது கம்பீர் கண்ணை நிச்சயம் திறந்திருக்கும் என்று பாசித் அலி தெரிவித்துள்ளார். இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை வென்றிருக்கிறது. இந்த சூழலில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.