புனே: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் குழுவில் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தவிர்த்து மற்ற யாருக்கும் போதுமான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் இல்லாதது விவாதமாகி உள்ளது.
4,331 நாட்களுக்கு பின் முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை சொந்த மண்ணில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மண்ணில் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தியது எப்படி, இந்திய ஸ்பின்னர்களை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக கையாண்டது எப்படி என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பின் நடக்கும் 2வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.
தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குழுவில் உள்ள மோர்னே மோர்கல், ரியான் டென் டஸ்காட்டே, அபிஷேக் நாயர் மற்றும் திலீப் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதில் மோர்னே மோர்கல்லை தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் முழுமையான டெஸ்ட் கிரிக்கெட் அனுபவம் கிடையாது. கவுதம் கம்பீர் கூட 58 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார்.
ஆனால் இவருக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக இருந்த ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏராளமான டெஸ்ட் அனுபவத்துடன் இருந்தனர். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருந்தது. ஆனால் கவுதம் கம்பீரை பொறுத்தவரை அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட எந்த ரஞ்சி அணிக்கும் பயிற்சி அளித்தது கிடையாது.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டையும் டி20 மோடிலேயே கவுதம் கம்பீர் அணுகுவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களின் டிஃபென்ஸில் கொஞ்சம் கூட கவனம் செலுத்துவதில்லை. இதனால் பயிற்சியாளர்கள் குழுவில் டெஸ்ட் அனுபவம் வாய்ந்த சிலரை கொண்டு வர வேண்டும் என்றும் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பவுலிங் பயிற்சியாளராக உள்ள மோர்னே மோர்கல் வேகப்பந்துவீச்சாளர். அவருக்கு இந்திய பிட்ச் குறித்து முழுமையான தெளிவு இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் ஸ்பின்னர்களான அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிடோருக்கு எப்படி அவர் பயிற்சி அளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.