மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்றிலுமே தோல்வியை தழுவி தொடரை முழுமையாக இழந்தது. இதன் மூலம் இந்திய அணி தனது சொந்த மண்ணில் முதல் முறையாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது.
இந்திய அணி இவ்வளவு மோசமாக தோல்விகளை தழுவியதற்கு கௌதம் கம்பீர் தான் காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கம்பீர் தலைமை ஏற்ற பிறகு இந்தியா எங்கெங்கெல்லாம் தோற்காமல் இருந்ததோ அங்கே எல்லாம் தோற்று வருகிறது.

சொந்த மண்ணில் இந்தியா தோற்றதற்கு கம்பீரின் மோசமான வழிகாட்டுதலே காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் என்றால் பொறுப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். சுழற் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு களத்தில் நின்று ஆடி ரன்களை சேர்க்க வேண்டும்.
ஆனால் கம்பீர் பயிற்சியாளராக வந்த பிறகு இங்கிலாந்தை பார்த்து இந்தியாவும் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற பாணியில் செயல்பட்டார். வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் குவித்தது. இதில் வெற்றியும் பெற்றது.
ஆனால் வங்கதேசத்திடம் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இல்லை.
ஆனால் நியூசிலாந்து அப்படி கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஏற்கனவே வென்று இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியிடம் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக பொறுப்பான ஆட்டத்தையே விளையாடி இருக்க வேண்டும். ஆனால் கம்பீர் அதிரடியாக ஆடுங்கள் என்று ஊக்குவித்திருக்கிறார்.
இதன் காரணமாக ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, சர்பராஸ்கான் போன்ற வீரர்கள் மோசமான ஷாட் ஆடி தோல்வியை தழுவி இருக்கிறார்கள். இதுதான் இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாகும். இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பல போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இங்கிலாந்து அணி இன்னும் ஒரு முறை கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கிடையாது. காரணம் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் அவர்கள் வேகமாக ஆடி வருகிறார்கள். இதனால் தற்போது இந்திய அணியும் இதே பாணியை கடைப்பிடிக்கிறது. இதனால் தான் இந்தியா தோல்வியை தழுவுகிறது. இந்த முட்டாள்தனமான முறையை மாற்றிக்கொண்டு இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.