பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய கடினமான பணி என்றால் கேப்டன் ஆகவும் பயிற்சியாளராகவும் இருப்பது தான். ஏனென்றால் இந்திய அணி வெற்றி பெற்றால் மரியாதை அனைத்தும் கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் சேரும். அதுவே தோல்வியை தழுவினால் பல விமர்சனங்களும் கேள்விகளும் எழும்.
அந்த வகையில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி பல குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றது. எனினும் 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று இந்தியா தோற்றது. அதன் பிறகு டி20 உலக கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்டது.

அதன் பிறகு இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட போகிறார் என்று செய்தி வந்த பிறகு ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற பின் இந்திய அணி பல போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. கம்பீர், இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் தான் முதல் முறையாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றது.
அதில் டி20 தொடரை இந்திய அணி இழந்தாலும், இலங்கைக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் தொடரை இழந்து சோகமான சாதனையை பதிவு செய்தது. கம்பீர் பயிற்சியாளராக தலைமையேற்ற பிறகுதான் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ந்து 30 விக்கெட்டுகளை இழந்து சோகமான சாதனையை படைத்திருக்கிறது. அதன் பிறகு 2024 ஆம் ஆண்டில் விளையாடிய ஒரு ,ஒருநாள் போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை என்ற சோகமான சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.
45 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இது முதல் முறையாகும். இதேபோன்று கம்பீர் தலைமை பயிற்சியாளரான பிறகு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 36 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியை இழந்து இருக்கிறது. இதேபோன்று கம்பீரின் வழிகாட்டுதலில் படி இந்திய அணி 19 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னசாமி மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதேபோன்று 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது. கம்பீர் பயிற்சியாளர் ஆன பிறகு தான் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 50 ரன்கள் கூட எடுக்க முடியாமல் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இது அனைத்தும் கம்பீர் பயிற்சியாளர் ஆன பிறகுதான் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பருத்தி மூட்ட குடோனில் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.