வதோதரா: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த இளம் வீரர் ஹர்ஷித் ராணா, பத்திரிகையாளர் சந்திப்பில் ஜஸ்பிரித் பும்ரா குறித்த கேள்வியால் கடும் கோபமடைந்தார். "பும்ரா இல்லாததால் பந்துவீச்சு பலவீனமாக உள்ளதா?" எனத் தொடுக்கப்பட்ட கேள்விக்கு, நச்சுனு பதிலடி கொடுத்து வாயை அடைத்தார் ராணா.
வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் பந்துவீச்சில் டெவான் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் என அரைசதம் அடித்த வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமல்லாமல், பேட்டிங்கில் இக்கட்டான நேரத்தில் 23 பந்துகளில் 29 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் ஹர்ஷித் ராணா.

போட்டி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்ஷித் ராணாவிடம், பத்திரிகையாளர் ஒருவர், "ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகத் தெரிகிறது. புது பந்தில் விக்கெட் எடுக்க இந்தியா திணறுகிறதே?" என்ற ரீதியில் கேள்வி எழுப்பினார். இதைக்கேட்டதும் ஹர்ஷித் ராணா முகம் மாறியது. பும்ரா இல்லை என்றால் மற்றவர்கள் சரியாக வீசவில்லையா என்ற தொனியில் அவர் டென்ஷனானார்.
அந்த நிருபருக்குப் பதிலளித்த ஹர்ஷித் ராணா, "சார்.. நீங்க எந்த கிரிக்கெட்டை பார்த்தீங்கன்னு எனக்குத் தெரியல. இன்றைய போட்டியை எடுத்துக்கொண்டால், சிராஜ் எவ்வளவு சிறப்பாகப் பந்துவீசினார் என்று பாருங்கள். புது பந்தில் நாங்கள் ரன்களையே கொடுக்கவில்லை. கட்டுக்கோப்பாகத் தான் வீசினோம்" என்று முகத்தில் அடித்தாற்போல் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை, ஆரம்பத்திலேயே விக்கெட் எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அழுத்தம் கொடுத்தால் போதும். புது பந்தில் விக்கெட் விழலைனா என்ன? மிடில் ஓவரில் விக்கெட் எடுப்போம். அதுதான் ஒருநாள் போட்டியின் அணுகுமுறை" என்று ஆவேசமாக விளக்கமளித்தார்.
உண்மையில் ராணா சொல்வதில் நியாயம் இருக்கிறது. நியூசிலாந்து தொடக்க வீரர்கள் 117 ரன்கள் சேர்த்தாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். குறிப்பாக சிராஜ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் ரன்களை வாரி வழங்கவில்லை. செட் ஆன பேட்ஸ்மேன்களை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியது ஹர்ஷித் ராணாதான். உலகின் நம்பர் 1 பவுலரான பும்ரா இல்லாதது குறைதான் என்றாலும், அவர் இல்லாமலேயே நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.