மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ஹர்சித் ராணா அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை இந்திய அணியின் துணைப் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் முழுமையாக மறுத்ததோடு விளக்கமும் அளித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் விளையாடவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் இந்திய கம்பேக் கொடுக்க தீவிரமாக இருக்கிறது. ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்திருப்பதால், ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே கடைசி டெஸ்ட் போட்டிக்காக இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே இந்திய அணியின் ரிசர்வ் வீரராக ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இதனால் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சிராஜ் மற்றும் ஹர்சித் ராணா இருவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளார் அபிஷேக் நாயர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்திய அணியில் எந்த வீரரும் புதிதாக சேர்க்கப்படவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு வாரம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒரு வீரருக்கு முக்கியம்.
இப்போதே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி குறித்து சிந்திக்க தேவையில்லை. எப்போதும் எங்களின் கவனம் அடுத்து விளையாடப் போகும் போட்டியில் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களில் இருந்த ஹர்சித் ராணா, சில நாட்களுக்கு முன்பாகவே விடுக்கப்பட்டு ரஞ்சி டிராபி தொடரில் விளையாட அறிவுறுத்தப்பட்டார்.
பின்னர் டெல்லி அணிக்காக களமிறங்கிய ஹர்சித் ராணா, அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, முதல் இன்னிங்ஸில் 59 ரன்களையும் விளாசி அசத்தினார். 22 வயதாகும் ஹர்சித் ராணா மணிக்கு 140 கிமீ வேகத்திற்கு மேல் எளிதாக வீசக் கூடிய பவுலர் என்பதால், ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணிக்காக அறிமுகமாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.