மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரு குழுவாக இணைந்து செயல்பட தவறிவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டதாக கூறியுள்ள ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய மண்ணில் இந்திய அணி முதல்முறையாக ஒயிட் வாஷ் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் எந்த அணியாலும் செய்ய முடியாத சாதனையை நியூசிலாந்து அணி சாதித்துள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியடைவது சாதாரண விஷயமல்ல.
இந்த தோல்வியை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதேபோல் நியூசிலாந்து அணி எங்களை விடவும் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள். தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம்.
அதேபோல் 2வது இன்னிங்ஸிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியது தான். ஆனால் ஒரு அணியாகவே நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும் போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைத்தோம். அதுதான் எங்களின் மனநிலையாக இருந்தது. ஆனால் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம். இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தமாக ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.