புனே: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புனே மைதானம் கொஞ்சம் கூட ராசியில்லாத மைதானம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை புனே மைதானத்தில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஒருமுறை கூட அரைசதம் அடித்ததில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தில் 45.3 ஓவர்களில் வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களை சேர்த்தார்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி தரப்பில் 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், இந்திய அணி தோல்வியடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனல் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழக்கும்.
புனே மைதானத்தை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இதுவரை கொஞ்சம் கூட ராசியாக இருந்தது கிடையாது. ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் மூலமாக புனே மைதானத்தில் நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அடிலெய்ட் மைதானத்திற்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புனே மைதானம் தான் அதிக சோதனையை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டு புனே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் தடுமாறி வருகிறது.
அதேபோல் 2001ஆம் ஆண்டுக்கு பின் தொடர்ச்சியாக 2 முறை 100 ரன்களுக்கு மேல் இந்திய அணி முன்னிலையை விட்டுக் கொடுத்துள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 2 முறை முன்னிலையை விட்டுக் கொடுத்தது. 23 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது.