புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் சேர்த்திருந்தது.

இதன்பின் 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் பேட்டிங்கை தொடங்கினர். டிம் சவுதியை சுப்மன் கில் அட்டாக் செய்து சிறப்பாக தொடங்கிய நிலையில், சான்ட்னர் அட்டாக்கில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கலங்கி போயினர். 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்திருந்த போது, சுப்மன் கில் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த விராட் கோலி ஒரு ரன்னிலும், மறுமுனையில் ஜெய்ஸ்வால் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரிஷப் பண்ட் - சர்ஃபராஸ் கான் இருவரும் இந்திய அணியை மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிளென் பிலிப்ஸ் வீசிய பந்துகள் லோ-பவுன்ஸ் ஆனதை கணிக்காததால், ரிஷப் பண்ட் 18 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து சர்ஃபராஸ் கானும் சான்ட்னரை அட்டாக் செய்ய முயன்று 11 ரன்களிலும், அஸ்வின் 4 ரன்களிலும் வெளியேறினர். இதனால் 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்தது. தொடர்ந்து ஜடேஜா - வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறிது நேரம் போராடினர். அதிரடியாக ஆடிய ஜடேஜா 38 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்த சில ஓவர்களில் இந்திய அணி 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
சிறப்பாக பவுலிங் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தமாக 45.3 ஓவர்களை மட்டுமே இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டுள்ளனர். இதனால் 2வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. புனே மைதானத்தில் 250 ரன்களை சேஸிங் செய்வதே பெரிய விஷயமாகும்.
இதனால் நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால், இந்திய அணி தோல்வியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்படி தோல்வியடைந்தால், 2012ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.