பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று கம்பேக் கொடுப்போம் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த போது, அடுத்த 4 போட்டியில் வென்றோம் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு நியூசிலாந்து அணியை அசால்ட்டாக எடுத்து கொண்டதே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் இருவர் மீதும் அதிக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இதுபோன்ற ஆட்டங்கள் சாதாரணம் தான். அதனால் இந்திய அணியின் பாசிட்டிவ் அம்சங்களை எடுத்து கொண்டு, அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இப்படியான ஒரு சூழலில் நாங்கள் இருந்திருக்கிறோம்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தோம். அதனால் இன்னும் 2 போட்டிகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிவோம். நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது சிறந்த விஷயம். 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், என்ன நடக்கும் என்பதை அறிவோம். ஆனாலும் எங்களின் 2 பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதனை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. 350 ரன்கள் பின் தங்கிய போது, பெரிதாக எதனையும் கணக்கில் கொள்ள தேவையில்லை. ரிஷப் பண்ட் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆடியது முதிர்ச்சியான ஆட்டம். ரிஷப் பண்ட் ஏற்கனவே இதுபோன்ற ஆட்டத்தை ஆடி இருக்கிறார். ஆனால் சர்ஃபராஸ் கான் முதல்முறையாக இப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதுவும் 3 அல்லது 4 டெஸ்ட் போட்டியில் மட்டுமே சர்ஃபராஸ் கான் விளையாடி இருக்கிறார். இருந்த போதும் முதிர்ச்சியாக விளையாடி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன்பின் கம்பேக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.