மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டியின் 6 இன்னிங்ஸிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவே இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட் வாஷ் செய்யப்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி இழந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சொந்த மண்ணிலேயே இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. இதனால் இந்திய அணி மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்திய அணியின் இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பெங்களூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் வெறும் 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாக மாறியது.
தொடர்ந்து புனே மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 53 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. அதேபோல் 2வது இன்னிங்ஸில் 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. தற்போது மும்பை மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 83 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கு ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை விட்டதே காரணமாக அமைந்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 6 இன்னிங்ஸிலும் இந்திய அணி 6 முறை மோசமாக விளையாடி கொத்து கொத்தாக விக்கெட்டை பறி கொடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸிலேயே 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், இந்திய அணி சுதாரித்து கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அட்டாக் செய்ய முயன்று டிஃபென்ஸை நம்பாமல் விக்கெட்டை பறி கொடுத்துள்ளனர். இந்திய அணியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என்று ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் மோசமாக செயல்பட்டிருப்பதும் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.