மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட மாட்டார் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கணிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் ஆகாஷ் சோப்ரா, சர்ஃபராஸ் கான் சேர்க்கப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் காயமடைந்ததால், அவரது இடத்தில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சர்ஃபராஸ் கான், 2வது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பினார். 195 பந்துகளில் 3 சிக்ஸ், 18 பவுண்டரி உட்பட 150 ரன்களை விளாசி அசத்தினார்.

சர்ஃபராஸ் கான் அதிரடியாக ரன்களை குவித்ததால், இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டனர். அழுத்தமான சூழலில் சர்ஃபராஸ் கானின் உச்சத்தில் இருந்தது இந்திய அணி நிர்வாகத்திற்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
அந்தப் போட்டியில் இந்திய அணியின் சுப்மன் கில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர்களான பார்த்திவ் படேல் மற்றும் ஆகாஷ் சோப்ரா கூட்டணி விவாதத்தில் ஈடுபட்டது.
அப்போது பார்த்திவ் படேல் பேசுகையில், 2வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் பெஞ்ச் செய்யப்படுவார் என்று கருதவில்லை. ஏனென்றால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால் தான் அவரின் பேட்டிங் வரிசை மாற்றப்படவில்லை. சுப்மன் கில் காயமடைந்ததால், கேஎல் ராகுலை நேரடியாக நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம். ஆனால் அவரை நம்பர் 6ல் தான் களமிறக்கினார்கள்.
அதேபோல் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராக தான் இந்திய பிளேயிங் லெவனில் விளையாடி இருக்கிறார். அடுத்தப் போட்டியில் நம்பர் 3ல் விளையாடக் கூடிய சுப்மன் கில் அணிக்கு திரும்பினால், நிச்சயம் சர்ஃபராஸ் கான் தான் பெஞ்சில் அமர வேண்டிய நிலை வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், இந்திய அணியின் சூழலை பார்க்கும் போது, சர்ஃபராஸ் கான் பெஞ்ச் செய்யப்பட வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இந்திய அணி நிர்வாகம் சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக இருக்கிறது. கேஎல் ராகுலும் முழு நம்பிக்கையுடன் காணப்படவில்லை.
அதேபோல் கருண் நாயருக்கு நேர்ந்ததை போல் சர்ஃபராஸ் கானுக்கு நடந்துவிடக் கூடாது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முச்சதம் விளாசிய அடுத்த போட்டியிலேயே கருண் நாயர் இந்திய அணியில் இருந்து ரஹானேவுக்காக பெஞ்ச் செய்யப்பட்டார். அது கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் சர்ஃபராஸ் கான் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.