பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க 3 வாய்ப்புகள் இருந்த போதும், அதனை கேப்டன் ரோஹித் சர்மா கோட்டைவிட்டுள்ளார். அந்த 3 வாய்ப்பையும் நியூசிலாந்து அணி சிறப்பாக பயன்படுத்தி கொண்டதே அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 107 ரன்கள் எடுத்து மிரட்டல் வெற்றியை பெற்றுள்ளது.

இதன் மூலமாக 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. ஸ்டீபன் பிளெமிங், மெக்கல்லம், வில்லியம்சன் உள்ளிட்ட நியூசிலாந்து கேப்டன்களால் கூட சாதிக்க முடியாததை, முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே டாம் லேதம் சாதித்துள்ளார். இதனால் நியூசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தவிர்ப்பதற்கு 3 வாய்ப்புகள் இருந்தது. 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான போதும், இந்திய அணி தோல்வியை தவிர்ப்பதற்கான வாய்ப்பும், சூழலும் கிடைத்தது. நியூசிலாந்து அணி 233 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அடுத்த 3 விக்கெட்டுகளை உடனடியாக கைப்பற்றி இருந்தால், அந்த அணியால் 356 ரன்கள் முன்னிலை பெற்றிருக்க முடியாது.
ஆனால் அந்த நேரத்தில் ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதி கூட்டணியை 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க அனுமதித்தது. இது இந்திய அணியின் கோட்டைவிட்ட முதல் வாய்ப்பாகும். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கின் போது சர்ஃபராஸ் கான் - ரிஷப் பண்ட் இருவரும் ஆட்டமிழந்த பின், புதிதாக வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. டெய்லண்டர்களுடன் இணைந்து கேஎல் ராகுல் பேட்டிங் செய்திருந்தால், குறைந்தபட்சம் 100 ரன்களையாவது சேர்த்திருக்க முடியும். அந்த வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது. இதனைத் தொடர்ந்து கடைசி வாய்ப்பு இந்திய அணிக்கு 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான பின், பிட்சை புரிந்து கொள்ளாமல் பவுலிங் செய்ததாகும்.
குறிப்பாக 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடியதே தவறான அணுகுமுறை. நிச்சயம் ஆகாஷ் தீப் போன்ற ஒரு ஸ்விங் செய்யக் கூடிய பவுலரை பிளேயிங் லெவனில் சேர்த்திருந்தால், இந்திய அணியால் விரைவாக நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்திருக்க முடியும் என்று விமர்சிக்கப்படுகிறது.