மும்பை: இந்திய அணியில் புஜாராவை போல் ஒரு செஷன் முழுக்க பேட்டிங் செய்யக் கூடிய வீரர் ஒரு தேவை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களும் அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்து ஆடினால், வரும் காலங்களிலும் இந்திய அணி ஒரே செஷனில் ஆல் அவுட்டாவதை பார்க்க வேண்டிய சூழல் வரும் என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்துள்ள தோல்வி ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 12 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் தொடரை கூட சொந்த மண்ணில் இழக்காமல் இருந்த இந்திய அணி, தற்போது சொந்த மண்ணிலேயே தோல்வி அடைய தொடங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஸ்பின் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இரு தரப்பிலும் 2 போட்டிகளில் இந்திய அணி தடுமாறி இருக்கிறது. அதேபோல் இரு போட்டிகளிலும் ஒரே செஷனில் இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு செஷன் கூட தாங்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்திருப்பது தான் மிகப்பெரிய பிரச்சனையாகவும் மாறியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், புஜாராவை இந்திய அணி மிஸ் செய்கிறதா? இதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஒரு வீரராக புஜாரா இன்னும் சில ரன்கள் விளாசி இருக்க வேண்டும், அவரை சுற்றி மற்ற வீரர்களும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஒருநாள் அனைவரும் ஓய்வு பெற தான் வேண்டும். அதேபோல் புஜாரா, ரஹானே உள்ளிட்டோரை கடந்து தான் ஆக வேண்டும்.
அவர்களின் இடத்தில் அடுத்த தலைமுறை வீரர்கள் கொண்டு வரப்பட வேண்டும். இதனை மாற்ற முடியாது. ஆனால் அந்த வீரர்களின் இடத்தில் யார் கொண்டு வரப்படுகிறார்கள் என்பது முக்கியம். தற்போது புஜாரா இடத்தில் சுப்மன் கில், ரஹானே இடத்தில் ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் இப்போதைய இந்திய அணியில் புஜாரா செய்து வந்ததை வேறு எந்த வீரராலும் செய்ய முடியாது.
இந்திய அணியின் அனைத்து வீரர்களும் அட்டாக்கிங் கிரிக்கெட்டையே விளையாடி வருகிறார்கள். இப்படி விளையாடினால், எந்தப் போட்டியும் டிராவில் முடியாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் அப்படி செயல்படாது. ஒரு செஷன் முழுக்க விக்கெட் கொடுக்காமல் விளையாட வேண்டும் என்று சொல்லாத வரை, இந்திய அணியின் ஆட்டத்தில் மாற்றம் இருக்கப் போவதில்லை.
சில நேரங்களில் வீரர்கள் தலையை குனிந்து டிஃபெண்ட் செய்ய வேண்டும். தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய சூழல் வரும். புஜாரா விளையாடிய கிரிக்கெட் டிஃபென்சிவ் தன்மையை கொண்டது. அது பார்க்க கவர்ச்சியாக இருக்காது. காலையில் இருந்து மாலை வரை களத்திலேயே இருந்து குறைவான ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால் அப்படியான கிரிக்கெட்டை தான் இந்திய அணி மிஸ் செய்கிறது. அப்படியொரு வீரர் இல்லாததால் தான், இந்திய அணி ஒரே செஷனில் ஆல் அவுட்டாகியது. ஒரே செஷனில் விக்கெட்டுகள் சரியும் போது, தடுப்பாட்டம் மூலம் நிறுத்துவதற்கு ஒரு வீரர் தேவை. பவுலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சோர்வடையும் போது, ரன்கள் விரைவாக வரும். புஜாராவின் ஸ்டைலை தான் இந்திய அணி மிஸ் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.