புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இந்த தோல்விக்கு பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என்று யாரையும் காரணம் கூற முடியாது என்று கூறிய ரோஹித் சர்மா, ஒரு குழுவாக மோசமான செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.

அதேபோல் சொந்த மண்ணில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா சந்திக்கும் 4வது டெஸ்ட் தோல்வி இதுவாகும். இந்த தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக செயல்பட்டது. எங்களை விடவும் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினர். முக்கியமான நேரத்தில் நாங்கள் கோட்டைவிட்டுள்ளோம்.
நியூசிலாந்து அணியின் சவாலுக்கு எங்களால் பதில் கொடுக்க முடியவில்லை. அதேபோல் இன்றைய நாளிலும் நாங்கள் நினைத்ததை போல் பேட்டிங் செய்ய முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் தான். ஆனால் பேட்ஸ்மேன்களும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதும் முக்கியம். நியூசிலாந்து அணியை 255 ரன்களுக்கு சுருட்டியது மிகச்சிறந்த கம்பேக்காக அமைந்தது.
ஏனென்றால் 200 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தனர். ஆனாலும் 259 ரன்களுக்கு எங்களால் முதல் இன்னிங்ஸில் வீழ்த்த முடிந்தது. இந்த பிட்சிலும் பெரிய மாற்றம் இல்லை. நாங்கள் ஒழுங்காக பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் கூடுதலாக கொஞ்சம் ரன்களை சேர்த்திருந்தால், இப்போது முடிவிலும் மாற்றம் இருந்திருக்கலாம்.
வான்கடே டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். மொத்தமாக ஒரு குழுவாகவே தோல்வியை அடைந்திருக்கிறோம். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு தோல்விக்கு காரணம் சொல்ல முடியாது. அடுத்தப் போட்டியில் கூடுதலாக தயாராகி வருவோம் என்று தெரிவித்துள்ளார்.