மும்பை: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாட முடிவு எடுத்துள்ளார். அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜடேஜா பந்துவீச்சில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் தடுமாறினார்.
இதனால், சர்வதேச கிரிக்கெட்டுக்கு டாடா பை பை காட்டுவார் என ரசிகர்கள் எரிர்பார்த்தனர். ஆனால், ஜடேஜா ரஞ்சி போட்டிக்கு திரும்பியுள்ளார். இதே போன்று ஷுப்மன் கில், ஜனவரி 22 அன்று ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சி டிராபிப் போட்டியில் களமிறங்குகிறார். சவுராஷ்டிராவுக்கு ஜடேஜாவும், பஞ்சாபுக்கு கில்லும் மோதும் இப்போட்டி, எலைட் குரூப் பிரிவில் நடக்கிறது.

ஜடேஜா தனது சொந்த மைதானமான நிரஞ்சன் ஷா மைதானத்தில், பஞ்சாப்பிற்கு எதிராக சவுராஷ்டிரா அணிக்காக விளையாடுகிறார். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் அவர் தனது வருகையை ஜடேஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய சங்கத் தலைவர் ஜெய்தேவ் ஷா, "ரவீந்திர ஜடேஜா எங்களைத் தொடர்புகொண்டு, ஜனவரி 22 அன்று ராஜ்கோட்டில் நடைபெறும் பஞ்சாப்பிற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டிக்கு தனது தயார்நிலையை உறுதிப்படுத்தினார்."
"அதன் பிறகு அவர் மற்ற போட்டிகளில் விளையாடுவாரா தெரியவில்லை, ஆனால் இந்தப் போட்டியில் நிச்சயம் களமிறங்குவார். அந்த ஆட்டத்திற்குப் பிறகு அவரது முடிவு என்னவாக இருக்கும் என்பதும் தெரியவில்லை" என்று ஷா மேலும் கூறினார்.
இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லும் பஞ்சாப் அணிக்காக ராஜ்கோட்டில் விளையாட வருவார் என ஷா உறுதிப்படுத்தினார். "ஷுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக ராஜ்கோட்டில் விளையாட வருவது குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.
சவுராஷ்டிரா இந்த சீசனில் முதல் நான்கு ரஞ்சி போட்டிகளை டிராவில் முடித்தது. நவம்பர் 2025 இல் கோவாவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாப்புக்கு பிறகு, ஜனவரி 29 அன்று சண்டிகருக்கு எதிராக விளையாடவுள்ளது.சவுராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அணிகள் தற்போது எலைட் குரூப் பிரிவின் கீழ் மட்டத்தில் உள்ளன. 5 போட்டிகளில் 1 வெற்றி, 4 டிராக்களுடன் சவுராஷ்டிரா நான்காவது இடத்திலும், பஞ்சாப் 5 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.
ஷுப்மன் கில் இந்த சீசனில் ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவர் கடந்த சீசனில் கர்நாடகாவுக்கு எதிராக விளையாடினார். ஜடேஜா மத்தியப் பிரதேசத்திற்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார், அது டிராவில் முடிந்தது.இந்த போட்டிக்குப் பிறகு இரு அணிகளுக்கும் ஒரு லீக் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.
கில் மற்றும் ஜடேஜாவுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாததால், இறுதி குரூப் ஆட்டத்திலும் அவர்கள் தங்கள் மாநில அணிகளுக்குக் விளையாட வாய்ப்புள்ளது. ஜடேஜா டி20ஐ ஓய்வு பெற்ற நிலையில், கில் நியூசிலாந்து டி20 மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இல்லை.