கவுஹாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது துல்லியமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். போட்டிக்குப் பின் பேசிய அவர், தனது 10 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் மற்றும் ஆரம்பக்கால விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.
தனது பந்துவீச்சுத் திட்டம் குறித்துப் பேசிய பும்ரா, "நான் பந்துவீச வருவதற்கு முன்பு ஹர்ஷித் ராணா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் எப்படி வீசுகிறார்கள், ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தேன். நான் பந்துவீச வந்தபோது பந்து சற்று தேய்ந்து பழையதாகி இருந்தது. பொதுவாக வெள்ளை பந்து அதிக நேரம் ஸ்விங் ஆகாது. அதனால் இந்தச் சூழலுக்கு ஏற்றவாறு என்னால் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்ய முயற்சித்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது" என்று கூறினார்.

அணியில் தனது பங்கு குறித்துப் பேசிய அவர், "அணிக்கு என்னால் பங்களிக்க முடிகிறது என்பதே எனக்கு மகிழ்ச்சி. புதிய பந்தில் வீசச் சொன்னாலும் சரி, அல்லது ஆட்டத்தின் இறுதியில் பழைய பந்தில் வீசச் சொன்னாலும் சரி, நான் மகிழ்ச்சியாகச் செய்வேன். ஆசியக் கோப்பைத் தொடரில் கூட நான் இதுபோன்று மாறுபட்ட சூழலில் பந்துவீசினேன். அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. ஒரு அணியாக நாங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். நானும் அதற்குத் தயாராகவே இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்துப் பேசிய பும்ரா மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். "சிறுவயதில் இந்திய அணிக்காக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். ஆனால் இன்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் ஒரு ஆல்-ரவுண்டர் கிடையாது, முழுமையான வேகப்பந்து வீச்சாளர். உடலில் ஏற்படும் காயங்கள், வலிகள் மற்றும் மக்களின் விமர்சனங்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் கிரிக்கெட்டிற்கு வந்த புதிதில், எனது பந்துவீச்சு முறையைப் பார்த்துவிட்டு, 'இவன் 6 மாதங்களுக்கு மேல் தாங்க மாட்டான், காணாமல் போய்விடுவான்' என்று பலர் கணித்தார்கள்.
ஆனால், இத்தனை ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது என் மகுடத்தில் மேலும் ஒரு சிறகாக அமைந்துள்ளது. இந்தப் பயணம் இன்னும் தொடரும் என்று நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா, வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டிம் சீஃபர்ட், மிட்செல் சான்ட்னர் மற்றும் கைல் ஜேமிசன் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.