பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்வியை தழுவியதற்கு கேஎல் ராகுல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். கே எல் ராகுலின் சொந்த ஊரான பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் என்பதால் அவர் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆன கே எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் ஒரு அரை சதம் அடித்திருந்தால், நிச்சயம் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம்.
ஆனால் ராகுல் வெறும் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ராகுல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதே வேளையில் இளம் வீரர் சர்பிராஸ் கான் 150 ரன்கள் அடித்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறார். வங்கதேச தொடரில் சர்பராஸ் கான் அணியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட போது, கே எல் ராகுல் முழு உடல் தகுதி பெற்றுவிட்டார் என்று கூறி அவருக்கு அணியில் இடம் கிடைத்தது.
இந்த சூழலில் கில்லுக்கு காயம் என கடைசி நேரத்தில் அணிக்குள் சர்பராஸ் கான் வந்தார்.தற்போது அவருக்கு கிடைக்கும் வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். தற்போது இக்கட்டான சூழ்நிலையில் 150 ரன்கள் அடித்த வீரரை அணியை விட்டு நீக்குவது என்பது தவறான காரியம் ஆகும். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுலை அணியை விட்டு நீக்க ரோஹித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் 32 வயதான கே எல் ராகுல் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு ஆடுகளத்தை தொட்டு வணங்கி வந்திருக்கிறார். இதுதான் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கே எல் ராகுல் ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்துள்ளது. இதுவரை 53 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேஎல் ராகுல் 2981 அடித்து இருக்கிறார்.இதில் 8 சதம், 15 அரை சதம் அடங்கும். சராசரி 33.87 என்ற அளவில் இருக்கிறது.
இதனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ராகுல் முடிவெடுத்திருக்கலாம் என்று செய்திகளும் வலம் வருகிறது. டெஸ்ட் அணியில் சர்பராஸ்கான், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன் துருவ் ஜூரல், ருதுராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் ராகுல் டெஸ்ட் இருந்து ஓரம் கட்டப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ராகுல் டெஸ்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவிக்க தான் இவ்வாறு ஆடுகளத்தை தொட்டு வணங்கி விட்டு சென்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.