இந்தியா வெற்றி
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பங்கேற்றது. அந்த தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி, தொடரை 5 - 0 என எளிதாக கைப்பற்றி வியக்க வைத்தது.
டி20 தொடரில் ரோஹித் காயம்
இந்த டி20 தொடரின் கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்த போது கணுக்காலில் பலத்த காயம் அடைந்தார். அவர் காயம் குணமாகாத நிலையில், வேறு வழி இன்றி ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர், இரண்டில் இருந்தும் நீக்கப்பட்டார்.
தவான் காயம்
இந்திய அணியின் மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் ஏற்கனவே காயத்தால் ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. அவர் நியூசிலாந்து டி20 தொடருக்கு வரும் முன்பே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் காயம் அடைந்தார். அதனால், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்தே நீக்கப்பட்டார்.
ஒருநாள் தொடர்
டி20 தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி ஒருநாள் தொடருக்கு தயார் ஆனது. இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த இரண்டு துவக்க வீரர்களும் இல்லாத நிலையில், வேறு யாரை துவக்க வீரர்களாக களமிறக்குவது என்ற கேள்வி எழுந்தது.
ராகுல் இல்லை
கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் விராட் கோலி முற்றிலும் வேறு ஒரு யோசனையை செய்தார். அவர் விக்கெட் கீப்பராக ஆடி வருவதால், அவரை மிடில் ஆர்டரில் விடுத்து இரண்டு புதிய துவக்க வீரர்களை ஆட வைத்தார் கோலி.
கோலி முடிவு
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அப்போது கோலி இந்திய அணியை அறிவித்தார். அதில் துவக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் இடம் பெற்று இருந்தனர்.
ப்ரித்வி
ஷிகர் தவான் காயமடைந்த நிலையில், ஒருநாள் தொடரில் அவருக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டவர் தான் ப்ரித்வி ஷா. ஏற்கனவே, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணிக்காக களமிறங்கினார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் பெற்றார்.
சேர்க்கப்பட்ட மயங்க் அகர்வால்
மயங்க் அகர்வால் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆடி வருகிறார். ரோஹித் சர்மா காயம் அடைந்து நீக்கப்பட்ட நிலையில், மயங்க் அகர்வால் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு, இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கினார். இவருக்கும் இதுவே முதல் ஒருநாள் போட்டி ஆகும்.
தோனிக்கு பின்..
2016இல் தோனி இரண்டு துவக்க வீரர்களை அறிமுகம் செய்தார். அப்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல், கருண் நாயர் இருவரும் துவக்க வீரர்களாக ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள். அதன் பின் இப்போது தான் அப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது.
இரு வீரர்கள் அறிமுகம்
இந்திய அணியின் இரு துவக்க வீரர்களும் ஒருநாள் போட்டிகளில் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆகும் நிகழ்வு நான்காவது முறையாக நடைபெறுகிறது. 1974இல் இந்திய அணியின் முதல் ஒருநாள் போட்டியில் சுனில் கவாஸ்கர் - நாயக் அறிமுகம் ஆனார்கள். 1976இல் திலிப் வெங்க்சர்க்கார், ஷர்மா அறிமுகம் ஆனார்கள். அதன் பின் கேஎல் ராகுல் - கருண் நாயர் 2016இல் ஒரே நேரத்தில் அறிமுகம் ஆனார்கள். தற்போது மயங்க் அகர்வால் - ப்ரித்வி ஷா ஒரே நேரத்தில் அறிமுகம் ஆகி உள்ளனர்.