கொல்கத்தா : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு காரணம் கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் கம்பீரும் அறிவில்லாமல் எடுத்த முடிவே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையாக சாடிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, இந்திய அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் சில சமயம் எனக்கு புரியாது.
அறிவில்லாமல் முடிவுகள் எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. பயிற்சியாளரும் கேப்டனும் என்ன சாதிக்க முயல்கிறார்கள் என்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. புதியதாக ஏதாவது ஒரு பயிற்சியாளரோ கேப்டனோ வந்தால் தான் ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவுகளில் ஈடுபடுகிறார்களா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு சுழற் பந்துவீச்சாளர்கள் குறைவான ஓவர்கள் வீசும் சூழ்நிலை வரலாம் என்று எனக்கு தெரியும். ஆனால் அது அஸ்வினுக்கு வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். அப்படி இருக்கும்போது 107 ரன்களை தற்காக்கும் போது பும்ராவுடன் அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும்.
சிறந்த கேப்டன்கள் கூட எப்போதாவது தவறுகள் செய்வார்கள். ஏனென்றால் கேப்டன்கள் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கும். இதனால் இப்படி தவறு நடப்பது சகஜம். இதனால் தான் பயிற்சியாளர் என்ற ஒருவர் இருக்கிறார். கேப்டன்கள் தவறு செய்யும் போது பயிற்சியாளர் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை காட்ட வேண்டும். அது மிகவும் முக்கியம்.
ஆனால் அப்படி ஏன் நடக்கவில்லை என்று எனக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை என்று மனோஜ் திவாரி கூறியிருக்கிறார். மனோஜ் திவாரியும், கம்பீரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல ஆண்டுகாலம் விளையாடி இருக்கிறார்கள். எனினும் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனோஜ் திவாரி கொல்கத்தா அணியிலிருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.