கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், கேப்டன் ரோஹித் சர்மா குறித்துத் தெரிவித்த கருத்து தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ரோஹித் சர்மா குறித்துப் பேசிய பயிற்சியாளரை, முன்னாள் வீரர் மனோஜ் திவாரி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "ரோஹித் சர்மாவின் சாதனையில் 5 சதவீதம் கூட செய்யாத நீங்கள் அவரைப் பற்றிப் பேசலாமா?" என்று திவாரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், ரோஹித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் அளித்த விளக்கம் தான் இந்தச் சண்டைக்குக் காரணம்.

ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இது குறித்துப் பேசிய உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட், "ரோஹித் சர்மா சமீப காலமாக அதிக போட்டிகளில் விளையாடவில்லை. அதனால் தான் அவரால் நீண்ட நேரம் நிலைத்து ஆட முடியவில்லை. ஆடுகளமும் சற்றுக் கடினமாக இருந்தது" என்று கூறியிருந்தார். சொந்த அணி கேப்டனை, பயிற்சியாளரே இப்படிச் சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். "நான் மிகுந்த மரியாதையுடன் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரியான் டென் டோஸ்கேட் என்னுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 4 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் ஒரு நல்ல மனிதர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரோஹித் சர்மா பற்றி அவர் பேசிய விதம் முற்றிலும் தவறு. அவர் அதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும்.
ரியான் டென் டோஸ்கேட் நெதர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆனால், ரோஹித் சர்மா பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இந்தியாவுக்காகச் செய்துள்ள சாதனைகளில், வெறும் 5 சதவீதம் கூட டோஸ்கேட் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது ஒரு ஜாம்பவானை பற்றி அவர் எப்படிக் குறை சொல்லலாம்?" என்று திவாரி விளாசியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், "ரோஹித் சர்மா இந்தியாவிற்குப் பல கோப்பைகளை வென்று தந்து மகிழ்ச்சிப்படுத்தியவர். நீங்கள் அணி நிர்வாகத்தில் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பவர் போல் கமெண்ட் அடிக்கக் கூடாது. சொந்த அணி வீரரைப் பற்றியே இப்படிப் பொதுவெளியில் பேசுவது, வீரர்களின் மன உறுதியைச் சிதைக்கும். நிதிஷ் குமார் ரெட்டி பற்றியும் அவர் குறை கூறியுள்ளார். ஒரு பயிற்சியாளர் இப்படிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
உண்மையில் ரோஹித் சர்மா ஃபார்ம் அவுட்டில் இல்லை. அக்டோபர் 2025-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த அவர், கடந்த மாதம் நடந்த விஜய் ஹசாரே ட்ராபியில் மும்பை அணிக்காகவும் சதம் விளாசினார். அப்படி இருக்கையில், "அவர் கிரிக்கெட் விளையாடி ரொம்ப நாளாச்சு" என்று பயிற்சியாளர் கூறியது தான் சர்ச்சைக்குக் காரணம். சொந்த அணிக்குள்ளேயே பயிற்சியாளரும், முன்னாள் வீரர்களும் இப்படி மோதிக்கொள்வது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.