பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து பேச்சாளராக முஹம்மது சிராஜ் விளங்கினார். சிராஜ் இருந்தாலே எப்படியாவது விக்கெட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு மேஜிக்கை தனது பந்துவீச்சில் சிராஜ் செயல்படுத்துவார்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இல்லை என்றாலும் சிராஜ் தன்னுடைய கடின உழைப்பால் விக்கெட்டுகளை வீழ்த்துவார். ஆனால் தற்போது சிராஜ் கடந்த சில போட்டிகளாக பெரிய அளவில் இந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிராஜ் 3 போட்டிகளில் ஒரு விக்கெட்டை தான் வீழ்த்தினார். அதன் பிறகு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் சிராஜ் 3 போட்டிகளிலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக கொழும்புவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 78 ரன்களை சிராஜ் விட்டுக் கொடுத்தார்.
அதன் பிறகு நடைபெற்ற வங்கதேச டெஸ்ட் தொடரில் சிராஜ் முதல் இன்னிங்ஸ் 2 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் எந்த விக்கெட்டும் எடுக்காமல் இருந்தார். இதேபோன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிராஜ் முதல் இன்னிங்ஸில் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் கூட சிராஜ் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் இருக்கிறார்.
இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகளாக இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் விக்கெட் எடுக்காமல் தடுமாறி வருகிறார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது. சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் போவது மற்ற பவுலர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.
இதனால் சிராஜ் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காமல் இருப்பது குறித்து கம்பீர் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் நீக்கப்படுவார் என தெரிகிறது. rcb வீரர் என்பதால் விராட் கோலியின் தயவால் சிராஜ் அணியில் இருப்பதாகவும் ரோகித் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.