மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் விளையாடவுள்ளது. இந்தப் போட்டியே இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் சொந்த மண்ணில் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், கடைசி போட்டியில் கம்பேக் கொடுக்க இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகும்.

இதன்பின் ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதன்பின் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி விளையாடும். இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதனை படைத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணியுடன் 2-0 என்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்துள்ளது. கடந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு, அஸ்வின், ஜடேஜா, பிரக்யன் ஓஜா உள்ளிட்டோர் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் சீனியர்கள் நீக்கப்பட்டு இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் இம்முறையும் சீனியர்கள் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் அந்த மாற்றங்களை செயல்படுத்த பிசிசிஐ தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோர் இந்திய அணியில் தொடர வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலி மற்றும் ஜடேஜாவின் ஃபார்மை பொறுத்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர். இதனால் ஜாம்பவான்களை சொந்த மண்ணில் இணைந்து பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலாக உள்ளனர்.