IND vs NZ: 10 மடங்கு அதிகம்.. 402 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்.. டிரா செய்ய போராடுமா இந்தியா?
பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், நியூசிலாந்து அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2வது நாள் ஆட்டம் முடிவிலேயே நியூசிலாந்து அணி 180 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்களை குவித்திருந்தது. ரச்சின் ரவீந்திரா சதமடித்து அதிரடியாக ரன்களை குவிக்க, இன்னொரு பக்கம் டிம் சவுதி 57 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் நியூசிலாந்து அணியின் முன்னிலை 300 ரன்களை கடந்தது.
இந்திய மண்ணில் முதல்முறையாக நியூசிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவது இதுவே முதல்முறையாகும். சிறப்பாக ஆடிய டிம் சவுதி 73 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 65 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் வந்த அஜாஸ் படேல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் ஓரூர்க்-க்கு பேட்டிங்கை கொடுக்காமல், ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ரன்களை குவித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் இறுதியாக 157 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதுமட்டுமல்லாமல் அந்த அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
2009ஆம் ஆண்டு நேப்பியர் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 619 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் 314 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
அப்போது இந்திய அணியின் வீரராக இருந்த தற்போதைய பயிற்சியாளரான கவுதம் கம்பீர், 436 பந்துகளை எதிர்கொண்டு 137 ரன்களும், விவிஎஸ் லக்ஷ்மண் 212 பந்துகளில் 124 ரன்களும் எடுத்து போட்டியை டிரா செய்தனர். தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டிய பணியும் அதுதான். 2 நாட்கள் பேட்டிங் செய்யும் வகையில் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications