மும்பை: இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மும்பை தொடங்கிய டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் கான்வே - லேதம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆகாஷ் தீப் வேகத்தில் கான்வே 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் இருவரும் அட்டாக்கில் வந்தனர்.

இதனால் நிதானமாக ஆடிய லேதம் 28 ரன்கள் எடுத்திருந்த போது வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரச்சின் ரவீந்திராவும் 4 ரன்களில் அதேபோல் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து வில் யங் - மிட்சல் இருவரும் நிதானமாக விளையாடி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வில் யங் அரைசதம் கடந்து நிதானமாக விளையாட, மிட்சல் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டார்.
பின்னர் ஜடேஜாவும் அட்டாக்கில் வர, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அப்போது ஜடேஜா சுழலில் வில் யங் 71 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து அதே ஓவரில் டாம் பிளெண்டல் டக் அவுட்டாகினார். பின்னர் கண்மூடி திறக்கும் நேரத்தில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார். இதனால் உஷாரான மிட்சல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் அவரும் வாஷிங்டன் சுந்தரை அட்டாக் செய்ய முயன்று விக்கெட்டை பறிகொடுக்க, அதே ஓவரில் அஜாஸ் படேலையும் வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 14வது முறையாக 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியிலும் அஸ்வின் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.