புனே: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். இன்றைய ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளாலும் மொத்தமாக 338 ரன்கள் குவிக்கப்பட்டு, 14 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. இதில் சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர்.

இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர ஸ்பின்னரான மிட்சல் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - லேதம் கூட்டணி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது.
அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அட்டாக் செய்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்க்கப்பட்டது. கான்வே 17 ரன்கள் எடுத்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த வில் யங் சிறப்பாக ஆடிய நிலையில், அஸ்வினிடம் சிக்கி 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரச்சின் ரவீந்திராவும் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அனுபவ வீரர் மிட்சல் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், கேப்டன் டாம் லேதம் மறுமுனையில் நிலைத்து நின்று விரைவாக ரன்களை குவித்தார். 49 ரன்கள் எடுத்திருந்த போது அவர் கொடுத்த கேட்சை ரிஷப் பண்ட் தவறவிட, அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்து முன்னேறியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் 86 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த பிளெண்டல் - பிலிப்ஸ் இருவரும் கடைசி நேரத்தில் விக்கெட் கொடுக்க கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். இதனால் 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் முன்னிலை 301 ரன்களாக உயர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இந்திய அணி ஒரேயொரு முறை மட்டுமே 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணியின் கட்டுப்பாட்டில் இந்திய அணி இருப்பதாக பார்க்கப்படுகிறது. 2வது நாள் மொத்தமாக இரு அணிகளாலும் 338 ரன்கள் சேர்க்கப்பட்டும், 14 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டுள்ளது.