மும்பை: இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் 2வது இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை எடுத்துள்ள நிலையில், நாளைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரிஷப் பண்ட் - சுப்மன் கில்லின் அபார அரைசதம் காரணமாக 263 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 38 ரன்களை சேர்த்தார்.

இதன்பின் 2வது இன்னிங்ஸை 28 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி தொடங்கியது. முதல் ஓவரிலேயே கேப்டன் டாம் லேதம் 1 ரன்னில் போல்டாகி வெளியேற, பின்னர் கான்வே - வில் யங் கூட்டணி இணைந்தது. இதில் கான்வே 22 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் ஆட்டமிழக்க, பின்னர் அஸ்வின் - ஜடேஜா இருவரும் அட்டாக்கில் வந்தனர்.
இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல்முறையாக இணைந்து மாஸ் காட்டினார். ரச்சின் ரவீந்திராவை 4 ரன்களில் அஸ்வின் வீழ்த்த, மறுபக்கம் டாம் பிளெண்டல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தி அசத்தினார். இதனிடையே டேரல் மிட்சல் - யங் கூட்டணி சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. ஆனால் அஸ்வினின் அபார ஃபீல்டிங்கால் மிட்சல் 21 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து அட்டாக் மோடில் இருந்த பிலிப்ஸை 26 ரன்களில் அஸ்வின் வீழ்த்தினார். இதனிடையே இளம் வீரர் வில் யங் அரைசதம் கடந்து விளையாடிய போது, அஸ்வின் வீசிய கேரம் பாலில் ஏமாந்து அவரிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் நியூசிலாந்து அணி 150 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இன்றைய ஆட்டம் முடிவதற்குள் நியூசிலாந்து அணியை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்று இந்திய பவுலர்கள் தீவிரமாகினர். தொடர்ந்து கடைசி ஓவரில் மேட் ஹென்ரி விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த, 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலமாக 143 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். நாளைய ஆட்டத்தில் கடைசி விக்கெட்டை இந்திய அணி விரைவாக வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணியால் எளிய இலக்கை விரட்டி முதல் வெற்றியை பெற முடியும் என்று பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நியூசிலாந்து ஸ்பின்னர்களையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கருதப்படுகிறது.