மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் வியூகத்தை உடைத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணி மீண்டும் அதே வியூகத்தை தான் இப்போது மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிராக பயன்படுத்த உள்ளது. புனே மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் தயார் செய்யப்பட்டு உள்ளது. 2017 டெஸ்ட் போட்டியிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் தான் தயார் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது ஆஸ்திரேலியா அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளராக நாதன் லியோன் மட்டுமே இடம் பெற்று இருந்தார். அதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்ற அதிக சர்வதேச அனுபவம் இல்லாத ஸ்டீவ் ஓ'கீஃப் அபாரமாக பந்து வீசி இரண்டு இன்னிங்ஸிலும் தலா 6 விக்கெட்களை வீழ்த்தி, மொத்தம் 12 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 107 ரன்களும் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 260 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 285 ரன்களும் எடுத்து, மொத்தம் 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து இருந்தது.
அந்தப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜெயந்த் யாதவ் எனும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் மூவரும் சேர்த்து மொத்தம் 14 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருந்தனர். தற்போது மீண்டும் அதே புனே மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் தயாரிக்கப்பட்டு உள்ளது.
IND vs NZ-கான்பூரில் வேகமாக ரன் அடித்த போது மட்டும் இனித்ததா? 46 ரன்னில் அவுட்டானது குறித்து கம்பீர்
இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற உள்ளனர். நியூசிலாந்து அணி இதை உணர்ந்து இருக்கிறது. அதற்கு ஏற்ப வியூகம் வகுத்து இருக்கிறது.
அந்த அணி அஜாஸ் பட்டேல், மிட்செல் சான்ட்னர் என இரண்டு முழு நேர சுழற் பந்துவீச்சாளர்களையும், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா என இரண்டு பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இதில் கிளென் பிலிப்ஸ் இந்தியாவுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச்சை தயார் செய்வதாக நினைத்து, சொதப்பி தோல்வி அடைந்தது. அதே போன்ற நிலை புனே டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஏற்படுமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்தியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.