பெங்களூர்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 3வது நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கிய நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 85 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சவுதி கம்பேக் கொடுத்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்து களத்தில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து 3வது நாள் ஆட்டத்தை ரச்சின் ரவீந்திரா - டேரல் மிட்சல் கூட்டணி தொடங்கியது. முதல் சில ஓவர்களிலேயே சிராஜ் வேகத்தில் மிட்சல் 18 ரன்களிலும், பிளெண்டல் 5 ரன்களிலும், பிலிப்ஸ் 14 ரன்களிலும், ஹென்றி 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 40 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் உணவு இடைவேளைக்குள் நியூசிலாந்து அணி ஆல் அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதி கூட்டணி இணைந்தது. டிம் சவுதி நிதானமாக விளையாட, ரச்சின் ரவீந்திரா டி20 மோடில் அதிரடிக்கு திரும்பினார். 88 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரச்சின் ரவீந்திரா, ஸ்பின்னர்களை பொளந்து கட்டினார். ஜடேஜா, அஸ்வின் என்று இருவரின் அட்டாக்கிலும் ரச்சின் ரவீந்திரா பவுண்டரி அடிப்பதில் தீவிரமாக இருந்தார்.
இவருடன் டிம் சவுதியும் சேர்ந்து கொள்ள, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் கண்மூடி திறப்பதற்குள் 300 ரன்களை எட்டியது. சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா அரைசதத்தில் இருந்து சதத்தை எட்ட வெறும் 35 பந்துகளை மட்டுமே எடுத்து கொண்டார். உணவு இடைவேளைக்கு முன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது.
உணவு இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி பவுலர்கள் வீசிய 10 ஓவர்களில் ரச்சின் ரவீந்திரா - டிம் சவுதி இணைந்து 85 ரன்களை விளாசியது தெரிய வந்துள்ளது. இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு காரணமாக அமைந்தார். டெய்லண்டர்கள் அட்டாக் செய்ய தொடங்கியதும் ஃபீல்டர்கள் நெருக்கமாக வைக்காமல், கொஞ்சம் வெளியில் நிற்க வைத்தார். '
அதேபோல் உணவு இடைவேளைக்கு மும் பும்ராவை எப்போதும் அட்டாக்கில் கொண்டு வருவார். ஆனால் உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கூட பும்ராவை அட்டாக்கில் கொண்டு வரவில்லை. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவின் பல்வேறு முடிவுகள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.