புனே: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. அதேபோல் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து 103 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் லேதமின் அபார ஆட்டத்தால் 255 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் சிக்சருடனும், ரோஹித் சர்மா பவுண்டரியுடனும் அதிரடியாக தொடங்கினர்.
ஆனால் சான்ட்னரின் பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்த ரோஹித் சர்மா, திடீரென டிஃபென்ஸ் ஆடி விக்கெட்டை பறிகொடுத்து 8 ரன்களுக்கு வெளியேறினார். பினன்ர் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது.
பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில் சான்ட்னர் சுழலில் சிக்கி சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி ரசிகர்கள் நம்பிக்கை கொண்ட போது, திடீரென சான்ட்னர் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்த சில நிமிடங்களில் ரிஷப் பண்ட் ரன் அவுட்டாகி டக் அவுட்டில் பெவிலியன் திரும்பினார். பின்னர் விராட் கோலி 17 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
பினன்ர் அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மீண்டும் சான்ட்னர் பவுலிங்கில் அஸ்வின் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் நம்பிக்கை கலைய தொடங்கியது. பின்னர் வந்த ஆகாஷ் தீப் 23 பந்துகளில் போராடி ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி வீரராக பும்ரா உள்ளே வந்தார். தொடர்ந்து ஜடேஜா 42 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. சிறப்பாக பவுலிங் செய்த சான்ட்னர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. இதன் காரணமாக சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்து மோசமான சாதனையை செய்துள்ளது.