மும்பை: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 3வது நாள் ஆட்டத்தில் 3 ரன்கள் மட்டுமே கூடுதலாக சேர்த்த நியூசிலாந்து அணி, 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் கண்மூடி திறப்பதற்கு அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வால் என்று அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ரிஷப் பண்ட் - ஜடேஜா கூட்டணி இணைந்தது.
ஒரு பக்கம் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த, ஜடேஜா நிதானமாக டிஃபென்ஸ் ஆடி கொடுத்தார். 6வது விக்கெட்டுக்கு இவர்களின் பார்ட்னர்ஷிப் 42 ரன்களை எட்டிய போது, ஜடேஜா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பண்ட் - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி இணைந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 48 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
தொடர்ந்து உணவு இடைவேளையின் போது இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில், அஜாஸ் படேல் பவுலிங்கில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர். பின்னர் வாஷிங்டன் சுந்தர் - அஸ்வின் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலையில், அஸ்வின் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று 8 ரன்களில் வெளியேறினார். அடுத்த பந்திலேயே ஆகாஷ் தீப் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 121 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மொத்த பொறுப்பும் வாஷிங்டன் சுந்தர் தலை மேல் விழுந்தது. பின்னர் வாஷிங்டன் சுந்தரும் அடுத்த ஓவரிலேயே போல்டாகினார்.
இதனால் இந்திய அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ்-ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.