புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட 100 பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு டிஃபென்ஸ் ஆடுவதற்கு பயம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் 3வது நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் நியூசிலாந்து அணி 69.4 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய அணியின் சரிவு தொடங்கியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 65 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 77 ரன்களையும், ரிஷப் பண்ட் டக் அவுட்டாகியும், விராட் கோலி 40 பந்துகளில் 17 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் 15 பந்துகளில் 9 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 47 பந்துகளில் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்திய அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதன்பின் ஆல்ரவுண்டர்களான ஜடேஜா - அஸ்வின் இருவரும் நிலைத்து நின்று போராடி வருகின்றனர். இந்த இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பலரும் டிஃபென்ஸ் ஆடுவதற்கே அச்சம் கொண்டது வெளிப்படையாக தெரிந்தது. எந்தவொரு வீரராலும் நியூசிலாந்து ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை.
இலங்கை, வங்கதேச, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகளில் வலிமையான ஸ்பின்னர்கள் இருப்பார்கள். அவர்களிடம் திணறுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னரிடம் திணறுவதை தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த இன்னிங்ஸ் மட்டுமல்லாமல், முதல் இன்னிங்ஸிலும் கூட இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் 100 பந்துகளை கூட சந்திக்கவில்லை.
65 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் கூட டி20 மோடில் விளையாடியதால் தான், அரைசதத்தை கடந்தார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், இதே சூழல் மீண்டும் வரும் என்று பார்க்கப்படுகிறது. இதனை பயிற்சியாளர்கள் குழு கவனித்து அதற்கேற்ப திட்டங்களை செய்ய வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.