துபாய்: 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள போட்டி நாளை (மார்ச் 2 அன்று) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்:
முன்னதாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அவர் இதுவரை வலைப்பயிற்சியில் ஈடுபடாததால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற ஒரு தகவல் பரவி வந்தது.

ஆனால், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எல்.ராகுல் மற்றும் இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரயான் டென் அந்த தகவலை மறுத்து இருக்கிறார்கள். இந்திய அணியில் எந்த வீரருக்கும் காயம் எதுவும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதை கருத்தில் கொண்டு பார்த்தால், ரோஹித் சர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.
ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என கூறப்பட்டு வந்தது. அதற்கும் தற்போது வாய்ப்பில்லை. எனவே, இப்போதைக்கு ரிஷப் பண்ட் மாற்று வீரராக வெளியே தான் அமர வேண்டும்.
அதைத் தவிர்த்து, முகமது ஷமிக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என்ற ஒரு பேச்சு உள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது முதல் மூன்று ஓவர்களை வீசியபின் மைதானத்தை விட்டு வெளியே சென்று முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டும் வந்து விளையாடினார்.
எனவே, அவருக்கும் சில அசௌகரியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்திய அணி அதற்கு அடுத்து மார்ச் 4 அன்று அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது.
இரண்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது என்பதாலும், இரண்டாவது போட்டி முக்கியமான அரையிறுதி போட்டி என்பதாலும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டால், அவரது இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
மற்றபடி, இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில், இதற்கு முன் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் அதிக மாற்றங்களை செய்யவில்லை. காயம் ஏற்பட்டால் மட்டுமே மாற்றங்களை செய்திருந்தது. அதேபோன்ற ஒரு கொள்கையை தான் இப்போதும் கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
அக்சர் படேல்
கே.எல்.ராகுல்
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்