மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியில் தவிர்க்க இந்திய அணி போராடிய நிலையில் தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங் செய்தபோது பந்து ஸ்டெம்பில் பட்டும் அவர் செய்த ஒரு புத்திசாலித்தனத்தால் அவர் அவுட் ஆகாமல் தடுக்கப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவிய நிலையில் ஒயிட் வாஷ் ஆகாமல் தடுப்பதற்காக மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி போராடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுக்க இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 28 ரன்கள் பின் தங்கிய நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வந்தனர்.
வழக்கம்போல் ரோகித் சர்மா, விராட் கோலி, சர்பராஸ் கான், சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஜடேஜா, ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க ரிஷப் பண்ட் மற்றும் தனி ஆளாக நின்று போராடி 64 ரன்கள் சேர்த்தார். ஒரு கட்டத்தில் அவரும் ஆட்டம் இழக்க நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு மூன்று விக்கெட்டுகளும் இந்திய அணி வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் அஸ்வின் நின்று விளையாடிக் கொண்டிருந்தார். பிலிப்ஸ் வீசிய பந்து அஸ்வின் எதிர்கொண்டபோது பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை நோக்கி வேகமாக உருண்டு ஓடியது. எனினும் இதனை கவனத்தில் கொண்ட அஸ்வின் உடனடியாக தன்னுடைய பேட் மூலம் பந்தை தடுக்க முயற்சித்தார்.இதனால் பந்தின் வேகம் குறைந்து ஸ்டெம்பில் பட்டது.
எப்போதுமே ஸ்டெம்பின் பைல்ஸ் கீழே விழுந்தால் தான் பேட்ஸ்மேன் அவுட் ஆனதாக கருதப்படும். அஸ்வின் மற்றும் பந்தை தடுக்க முயற்சி செய்யவில்லை என்றால் பந்து நேரடியாக உருண்டு வேகமாக ஸ்டெம்பில் பட்டு அவர் அவுட் ஆகி இருப்பார். அதேசமயம் தனது கைகளால் பந்தை எடுத்திருந்தாலோ அப்போதும் அவுட் ஆகி இருப்பார். ஆனால் அஸ்வின் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் பேட்டால் பந்தின் வேகத்தை தடுத்தார்.
அஸ்வின் தடுத்தும் பந்து உருண்டு போய் ஸ்டெம்பில் பட்டது குறிப்பிடத்தக்கது.ஒருவேளை அஸ்வின் பேட்டால் ஸ்டெம்பில் மோதி பைல்ஸ் கீழே விழுந்திருந்தாலும், அவர் ஹிட்விகேட் ஆகி இருப்பார். பதற்றமான நிலையில் கூட அஸ்வின் அபாரமாக செயல்பட்டு தன்னுடைய விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.