புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு 2 முக்கிய நபர்கள் காரணமாக அமைந்துள்ளனர். ஆசிய சுற்றுப்பயணத்திற்காக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இலங்கை ஜாம்பவான் ரங்கனா ஹெராத் மற்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இருவரும் பணியாற்றியது தெரிய வந்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. புனே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் சான்ட்னர் மொத்தமாக 13 விக்கெட்டுகளையும், அவருக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ் மற்றும் அஜாஸ் படேல் இருவரும் செயல்பட்டனர். இன்னொரு பக்கம் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் 40 சதவிகிதம் ஸ்வீப் ஷாட்கள் மூலமாக ரன்களை குவித்திருக்கின்றனர். கான்வே, ரச்சின் ரவீந்திரா, லேதம், கிளென் பிலிப்ஸ் உள்ளிட்டோர் இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.
அதேபோல் சான்ட்னர், கிளென் பிலிப்ஸ் உள்ளிட்டோர் புனே மைதானத்தில் கூட சரியான லைன் மற்றும் லெந்தில் தொடர்ச்சியாக வீசி வந்தனர். நியூசிலாந்து அணியால் இப்படியான திட்டங்களை உருவாக்கியது எப்படி என்ற இந்திய ரசிகர்கள் குழம்பி உள்ளனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இலங்கை ஜாம்பவான் ஹெராத் மற்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசியாவில் தொடர்ந்து 3 டெஸ்ட் தொடர்களில் நியூசிலாந்து அணி விளையாடி இருக்கிறது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இழந்தது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் தொடரில் இருவரின் பயிற்சியும் நியூசிலாந்து அணிக்கு பயனளித்துள்ளது.
விக்ரம் ரத்தோர் பாதியிலேயே விலகினாலும், ஹெராத் அந்த அணியுடன் தொடர்ச்சியாக பயணித்து வருகிறார். இதன் காரணமாகவே நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருவது தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிஃபென்ஸில் தங்களின் ஆட்டத்தை மெருக்கேற்றவில்லை என்றால், வரும் காலங்களிலும் தோல்விகள் தொடரும் என்று பார்க்கப்படுகிறது.